கோழிப்பண்ணைத்தொழிலின் வருங்காலம்
விவசாய போக்குகள்
கடந்த இருபதாண்டுகளில் கோழிப்பண்ணைத்தொழில் அபாரமான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. வீட்டின் துணைத்தொழிலாக இருந்த ஒன்று தொழில்நுட்ப வசதிகளுடன் நவீனமான தொழிலாக இன்று மாறியிருக்கிறது. ஆண்டொன்றுக்கு 4.7 மில்லியன் டன் கோழி இறைச்சி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. நாட்டின் சந்தையில் கோழி இறைச்சிக் கடைகள் வழியே உயிர்க்கோழியாக அனுப்பப்படும் அளவு 95% மாகவும், பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி 5% மாகவும் இருக்கிறது. முறைப்படுத்தப்பட்ட கோழிப்பண்ணைத்தொழிலின் பங்களிப்பு சந்தையில் 80% மாக இருக்கும் நிலையில் அதில் 60% முதல் 70% வரை ஒருங்கிணைக்கப்பட்ட சந்தை அமைப்புகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. மெக்கின்ஸி நிறுவனத்தின் ஆய்வின்படி இன்று 3.2 கிலோவாக இருக்கும் தனிநபர் கோழி இறைச்சி நுகர்வு 2030 ஆம் ஆண்டில் 9,1 கிலோவாக அதிகரிக்கும். தனிநபர் வருமான அதிகரிப்பு, மக்கள்தொகையில் அபரிமிதமான மத்திய வர்க்க எண்ணிக்கை அதிகரிப்பு, ஊட்டச்சத்து மிக்க உணவுவகைகளை வாங்கும் திறன் அதிகரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற பல காரணங்கள் கோழிப்பண்ணைத் தொழிலின் வளர்திறன் காரணிகளாக அமைந்திருக்கின்றன. அரசாங்கத்தின் ஆதரவு நடவடிக்கைகளும், நிதி நிறுவனங்களின் ஆதரவும் நாட்டின் வணிக நோக்கிலான கோழிப்பண்ணைத் தொழிலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன. தடையற்ற மின்சாரம், அரசாங்கத்தின் கூடுதல் கவனம் ஆகியவை உதவினால் இத்தொழில் இன்னும் சிறப்பான வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள தொழிலாகும்.
நுகர்வோர் போக்குகள்
குளோபல் கன்ஸ்யூமர் டிரெண்ட்ஸ் 2020 அறிக்கையின்படி, புரதச் சத்துக்கான சந்தை வாய்ப்புகளில் கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கான தேவை வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த இருபதாண்டுகளில் புரத உணவின் தேவை 40% அதிகாரிக்கும் எனவும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நுகர்வோரைப் பொறுத்தவரை கோழி இறைச்சியே பலவகை உணவு தயாரிக்க ஏற்றதாகவும், ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிக்க உணவாகவும் சமைக்க எளிதானதாகவும் இருக்கிறது. இக்காரணங்களால் சில ஆண்டுகளாக கோழி இறைச்சி நுகர்வு வெகுவாக அதிகரித்திருக்கிறது, கோழி இறைச்சி உண்பதை நோக்கி நுகர்வு ஆர்வத்தைத் தூண்டும் முக்கியக்காரணிகளாக கீழ்க்கண்டவற்றைப் பார்க்கலாம்.
எளிதான, வசதியான உணவு
குடும்பம் முழுவதற்கும் ஊட்டச்சத்து வழங்கும் உணவாக இருப்பது, சமைப்பதற்கு எளிதான உணவுவகையாக இருப்பது ஆகிய காரணங்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் மீது மக்களின் தேவையை முன்னுரிமையாக்கி இருப்பதால் இவற்றின் வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கிறது. விரைவான, எளிதான உணவு என்பதை நோக்கி தனிப்பட்ட, வணிக நோக்கிலான விதங்களில் மக்கள் நகர்வது காரணமாக கோழி இறைச்சி நுகர்வோரிடையே தவிர்க்க இயலாத உணவாக மாறியிருக்கிறது.
ஆரோக்கியமான உணவு
இன்று ஆரோக்யமான உணவுப்பழக்கமே நுகர்வோரின் விருப்பமாக இருக்கிறது. அவர்கள் புரதம் நிறைந்த குறைந்த கார்போஹைட்ரேட் உணவைத் தேடுகிறார்கள் இதன் காரணமாக புரத உணவுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கோழி இறைச்சி பொருத்தமானதாகவும், நுகர்வோரின் விருப்பத்தேர்வாகவும் அமைவதைக் காண முடிகிறது.
சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள நுகர்வோர்
இன்றைய நுகர்வோர் பொருட்களை வெறுமே வாங்கி நுகர்வதை மட்டும் செய்வதில்லை. பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு நட்பான பொருட்களைத் தயாரிப்பது, சுற்றுச்சூழலை நிலையாகப் பாதுகாக்கும் விதத்தில் தயாரிப்பு முறைகளைக் கையாளுவது ஆகியவற்றைக் குறித்த விழிப்புணர்வு சந்தையில் பெருகி ஒரு முக்கிய அம்சமாக மாறியிருப்பது மட்டுமன்றி நிறுவனங்களும் இந்த அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி நிலைத்த சுற்றுச்சூழலுக்கான அடிப்படையில் தயாரிப்பு முறைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அவ்வாறு செயல்படாத போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் 16% அதிக விற்பனை செய்கிறார்கள்.
தொழில்நுட்பங்களின் பெருக்கம்
தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல் சந்தையில் நுகர்வோரின் போக்கைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இணைய (ஆன்லைன்) வழி விற்பனை என்பது உணவுத்துறைக்கு புதிய கதவுகளைத் திறந்திருக்கிறது. இந்தச்சூழல் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளுக்கான சந்தையில் நல்வாய்ப்புகளை புதிதாக உருவாக்கியிருக்கிறது.
கோழிப்பண்ணை கையேட்டினை தரவிறக்கம் செய்ய – A Reference Guide for Central and State Poultry Farms by Department of Animal Husbandry, Dairying and Fisheries, Government of India
தொழில்நுட்பப் போக்குகள்
இடம் மற்றும் தொழிலாளர் ஆகியவற்றில் ஏற்படும் பற்றாக்குறையை தொழில்நுட்பத்தின் மூலம் ஈடுசெய்யும் போக்கு உலகம் முழுவதும் நடக்கிறது. அதிகரித்துக் கொண்டே வரும் மக்கள்தொகைக்கான உணவின் தேவையும் பெருகிக்கொண்டே வருகிறது. விவசாயிகள் 2050 ஆம் ஆண்டில் 9 பில்லியன் மக்களுக்கு உணவளிக்க வேண்டியிருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே கோழிப்பண்ணை விவசாயம் அதிகரித்து வரும் தேவையை நிறைவேற்றும் பொருட்டு தம் உற்பத்தியை பல மடங்கு பெருக்கும் விதத்தில் தம் உற்பத்தி முறைகளில் தொழில்நுட்ப மாற்றங்களைக் கொணர வேண்டியுள்ளது. கோழிப்பண்ணைத்தொழிலின் செயல்திறனை அதிகரிக்கும் விதத்திலான நவீன தொழில்நுட்பங்களின் வரவு பெருமளவில் மாற்றங்களை இத்தொழிலில் சாத்தியப்படுத்தியுள்ளது. முட்டை,கோழி இறைச்சி, தீவனத் தயாரிப்பு, தொழிலை நடத்தும் விதம் ஆகியவற்றில் பெரும் தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்கனவே உலகம் சந்திக்க ஆரம்பித்து விட்டது.
கோழிப்பண்ணைத் தொழிலில் பெருமளவில் மாற்றம் ஏற்படுத்தும் சில குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ரோபோக்கள்
ட்ரோன்கள்
சென்சார்கள்
செயற்கை நுண்ணறிவு
ஆக்மென்ட் ரியாலிட்டி
மெய்நிகர் உண்மை
பிளாக் செயின்
3 டி பிரிண்டிங்
இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்
பெரிய தரவு பகுப்பாய்வு
கோழிப்பண்ணையை சுத்தம் செய்தல், முட்டைகளை சேகரித்தல் போன்றவற்றில் இயந்திர செயலிகளை (ரோபோட்கள்) பயன்படுத்துவதால் மனித உழைப்பையே சார்ந்திருப்பது குறைகிறது. குறுவானூர்திகளை (ட்ரோன்) இயக்கி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியினை வரையறுக்கப்பட்ட சூழலில் மேற்கொள்ளமுடியும். குறைந்த அளவு நிறுவுகைச் செலவுகளோடு வைக்கப்படும் உணர்செயலிகள்(சென்ஸார் )மூலம் பண்ணைக்குள் ஒரு வரையறுக்கப்பட்ட/கட்டுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்க இயலும். செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ்) தொழில்நுட்பம் மூலம் அறிதிறன் சார்ந்த பணிகளான தீவனம் அளிப்பதில் கட்டுப்பாடு, உற்பத்தி மற்றும் செயல்முறைகளில் மேம்படுத்தலை செய்ய முடியும் என்பது இத்தொழிலை வளர்ச்சியும், பாதுகாப்பும் உள்ள ஒன்றாக மாற்றுகிறது. வளர் மெய் தொழில்நுட்பம் (ஆக்மெண்டெட் ரியாலிட்டி) மூலமாக முட்டைகளின் தர மதிப்பீட்டுப் பணிகளை செய்ய இயலும். மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் (விர்ச்சுவல் ரியாலிட்டி) பயன்படுத்தி கோழி மந்தைகள் குறித்த புரிதல்களை ஏற்படுத்த முடியும் என்பதால் இதை ஒட்டிய பணிப்பயிற்சி, பண்ணைக் கல்வி ஆகியவற்றை பண்ணைக்குள் வரவேண்டிய அவசியமில்லாமலேயே தெரிந்து கொள்வது எளிதாக மாறும். கட்டசங்கிலி /தொடரேடு தொழில்நுட்பம் (ப்ளாக் செயின்) வழியே பண்ணையில் நடக்கும் தீவனம் அளிக்கும் அமைப்பையும், உணவு – அளிப்பு சங்கிலியையும் கண்காணித்து கட்டுப்படுத்த இயலும். இணைய வழியே இணைக்கப்படும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கோழிப்பண்ணையின் மொத்த நிர்வாகத்தையும் புத்திசாலித்தனமாக இருக்கையில் அமர்ந்தபடியே மேலாண்மை செய்ய இயலும். பெருந்தகவல் பகுப்பாய்வு (பிக் டேட்டா அனலைசிஸ்) நுட்பத்தைப் பயன்படுத்துவதன் வழியே இதனை இன்னும் சிறப்பாகக் கையாள முடியும். ஆகவேதான் இந்த நுட்பத்தால் “தகவல் வேளாண்மை” என்பதிலிருந்து ஒவ்வொரு கோழியையும் கவனித்தல் எனும் வேளாண்மைப் பயன்பாடாக மாற முடிகிறது.
Stay updated
Get Our Latest Articles Delivered In your inbox
Reach Us
Please get in touch and we will be happy to help you.
PFRC
S.F.NO 388/3, Ist Floor, Federal (Upstairs),
Chettipalayam Road,
Palladam - 641664,
Tirupur District, Tamilnadu, India.
04255-254877
04255-255371
info@pfrc.in